Saturday, October 13, 2012

நள்ளிரவுக் கோரிக்கை


ஏற்று எனை உன் வீட்டிலெரியும் விளக்கின் சுடரென
அகத்தில் ததும்பும் அன்பின் நீர்நிலைகளில்
கொக்கென உறையும் உன் பார்வைகள்
அன்று நற்சூரியன் சுடாமல் போனதென்ன இப்பனித்துளியை
அன்பே
நான்தான் சூரியன் உன் இரவின் காட்டில் மின்மினியெனத் திரிந்தவன்
பைந்தமிழ் மொழியில் முன்றெழுத்து வார்த்தைகளைத் தேர்ந்தவன்
அன்பே அவை
காதல் அன்பு காமம் மோகம் பசலை மையல்
தொழுகை யும் கூட
விடுதலை வழங்கும் உன் கூந்தல் அசைவுகள்
காற்றில் எழுதும் பாடல்களின் துவக்க வரிகள்
நான் உச்சரித்த சொற்களின் திரிந்த பொருளின் நுட்பம்
உன்னிடத்தில் என் கனவையே அர்ப்பணிக்கிறேன்
அங்கே நீந்தும் கப்பல்களுக்கு மேலே மீன்கள் பறக்கும்
கால்பாவிய நிலத்தின் மீது விண்மீன்கள் மலரென முளைக்கும்
அன்பே அகம் குளிர
இப்போது ஒரு பாடல் பாடு
அதன் அர்த்தம் நம் அன்பாக இருக்கட்டும்
அதன் வார்த்தைகள் மையல் கணத்தில்
ஒருவருக்கொருவர் இட்டுக்கொண்ட பெயர்களாக இருக்கட்டும்
நீளும் இவ்விரவில் விரல்கள் துடிக்க
வார்த்தைகளாக விழும் விசையின் ஒவ்வொரு அழுத்தமும்
அன்பே
இருதயத்தின் துடிப்பென அறியும் கணத்தில்
நீ கன்னியென இருந்தாய்
நான் அந்த கந்தர்வன்
மலர்க்கீரீடம் அணிவிக்க நிலவின் துண்டைக் கொய்தவன்
மரப்பாச்சிகளின் ஆடை திருடி உன் சன்னல்களில் விரித்தவன்
அன்பே
உன் நிதம்பம் முகர்ந்த யூனிகார்ன்
வலப்பக்க காலில் மூட்டின் மேலே மச்சமென ஆனவன்
ஆழ்கடலின் திமிங்கலமாய்த் திரியும் உன் முதுகைத் தடவ
நீந்தும் மீன்கள் ஒவ்வொன்றாய் வழிகேட்டு யுகங்களைக் கடந்தவன்
அன்பே
உனைச் சேர்வேன் சிப்பிகள் சூழ்கொள்ளும் மழைப்போதில்
மின்னல் முறியும் ஒளியில் இடியின் இசையில்
அன்பே
             உனைச் சேர்வேன்
கடந்த வரியின் முதல் வார்த்தைக்கு முன்பிருக்கும் வெற்றிடத்தில்
அப்போதே அறிவாய்
நீ உயிர்கொண்ட நோக்கமும் நான் உடல் கொண்ட நோக்கமும்

3 comments:

Anonymous said...

ending is nice...

ஜீவ கரிகாலன் said...

கவிஞன் நள்ளிரவில் கோரிக்கை விடுத்ததால், சூரியனும் மின்மினியாய் ஒளித் தூரல் இடச் செய்யும் வித்தை கைகூடியும், முதல் வரிக்கு முந்தைய வெற்றிடம்..... சூட்சுமமாய் மிளிர்கிறது

rvelkannan said...

அவ்வப்போது வருவதுண்டு, இனி அடிக்கடி வருவேன் நண்பரே
நள்ளிரவு கோரிக்கை என்னை அந்த அளவிற்கு செய்து விட்டது